மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த நாட்டு கை துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் முன்பு சனிக்கிழமை காலை நாட்டு கை துப்பாக்கி ஒன்று அங்குள்ள சிறுவர்களின் கைகளில் கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதியினர் துப்பாக்கி, துப்பாக்கி கவர் மற்றும் இரும்பு குண்டு தோட்டாக்களை கோயிலில் வைத்து பூட்டிவிட்டு, வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் கை துப்பாக்கியை ஆய்வு செய்து, அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த நாட்டு கை துப்பாக்கி.
மேலும் இது குறித்து திருச்சி துப்பாக்கி பராமரிப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து, கை துப்பாக்கியின் ரகம் குறித்து தெரிவிப்பார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உறையுடன் கை துப்பாக்கி மற்றும் குண்டுகளை விட்டு சென்றது யார், வேட்டைக்காக பயன்படுத்தபட்டதா என்பது குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் முன்பு துப்பாக்கி கிடக்கும் சம்பவமறிந்து சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.