இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் செப். 17 முதல் சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும் என்றும், அது முதல் 5 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோயில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நாளும், இணையதளத்தில் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். செப் 21 வரை அதாவது ஐந்து நாள்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.