மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு விரிவான முறையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சித் தலைவர்களுக்கு கூட்டம் நடத்தி தடுப்பூசி முகாம்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் எவ்வாறு உதவிட வேண்டும் என்பது குறித்து விளக்கம் தரப்பட்டிருந்தது.
மானாமதுரை இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் வருகை தந்ததால் முகாம்களில் வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த ஒன்றியங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கரோனா தடுப்பூசி தீர்ந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்களில் நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சில தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் மருத்துவப் பணியாளர்களிடம் தகராறு செய்யும் நிலை ஏற்பட்டது. சில தடுப்பூசி மையங்களில் ஊசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களிடம் அவர்களது செல்பேசி நம்பர் பெற்றுக்கொள்ளப்பட்டு போனில் தகவல் வந்தவுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என மருத்துவப் பணியாளர்கள் தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மருத்துவத் துறையைச் அதிகாரி ஒருவர் கூறுகையில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களுக்கு போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. மானாமதுரை வட்டாரத்திற்கு 2,200 தடுப்பூசிகளும் இளையான்குடி வட்டாரத்திற்கு 3,300 தடுப்பூசிகளும் மட்டுமே வழங்கப்பட்டது. இதுபோல் திருப்புவனம் ஒன்றியத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனால் காலை 10 மணிக்கெல்லாம் அனைத்து முகாம்களிலும் பரவலாக தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டது. மேற்கண்ட பகுதிகளில் பகல் 12 மணிக்கு மேல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக திறக்கப்படவில்லை. கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி கொடுக்கப்பட்டிருந்தால் இப்பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு ஊசி போட வந்த பொதுமக்கள் அனைவருக்குமே கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கலாம் என்றார்.