வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கரோனா தடுப்பு முகாமிற்கு, ஊராட்சி மன்றத்தின் சார்பில் வாழை மரங்கள், மாவிலை தோரணம் கட்டியும் வண்ணக் கோலங்கள் வரைந்தும் பொதுமக்களுக்கு வரவேற்பு அளித்து அசத்தினர்.
தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் அளவில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமிற்கு, ஊராட்சி மன்றத்தின் சார்பில் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டி, தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில் தலைமையில், துணைத் தலைவர் ரேவதி சசிகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியை ரமா ஆகியோர் வரவேற்பளித்தனர்.
வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன் ஜெகதீஸ்வரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாணகுமார் ஆகியோர் முன்னிலையில், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாம் நடைபெறும் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதும், கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் இணைந்து பல வண்ண கோலங்கள் வரைந்து இருந்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். தடுப்பூசி முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு சிறப்பான வரவேற்பளித்த ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு, அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.