அனிதா தற்கொலை செய்து கொண்டது அதிமுக ஆட்சியில்தான்: ஸ்டாலின் பதில்

அனிதா தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அனிதா தற்கொலை செய்து கொண்டது அதிமுக ஆட்சியில்தான்: ஸ்டாலின் பதில்
அனிதா தற்கொலை செய்து கொண்டது அதிமுக ஆட்சியில்தான்: ஸ்டாலின் பதில்

‘நீட்’ தேர்வு அச்சத்தால் மாணவர்  தனுஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அனிதா தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

‘நீட்’ தேர்வு பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில், நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஏன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது. ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இதே சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான். 

நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். 

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான். இப்போது உயிரழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான். 

மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம்.  அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால் நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை இரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதிலாக சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com