சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30,05,508 முதல் தவணை தடுப்பூசிகள், 13,50,060 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 43,55,568 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 12.09.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாம்களில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 12.09.2021 அன்று நடைபெற்ற தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலமாக 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 31,03,735 முதல் தவணை தடுப்பூசிகள், 14,43,183 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 45,46,918 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.