கோயில் நிலத்தை ஆக்கிரமித்தால் குண்டா் தடுப்பு சட்டம்: அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பவா்கள் அல்லது கோயில் நிதி மற்றும் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துபவா்களை தேவைப்பட்டால் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரிகள் தயங்கக் கூடாது
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பவா்கள் அல்லது கோயில் நிதி மற்றும் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துபவா்களை தேவைப்பட்டால் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயங்கக் கூடாது என்று சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வாா் தேவஸ்தான கோயில் வழக்கு: சென்னை மயிலாப்பூா் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வாா் தேவஸ்தான கோயிலின் ஐந்து அறங்காவலா்களை தற்காலிக பதவி நீக்கம் செய்து, அறநிலையத் துறை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட அறங்காவலா்களில் ஒருவரான ஆடிட்டா் என்.சி. ஸ்ரீதா் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு: கோயில் சொத்துகள் மோசடி, சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் சமூகத்திற்கு எதிரான குற்றமாகும். கோயிலின் நிதி முறைகேடு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றமாகும். இதுபோன்ற குற்றங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது அரசு வழக்குத் தொடர வேண்டும்.

கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுகின்றன: கோயில்களின் கட்டுப்பாட்டாளராக அரசு இருப்பதால், இந்தக் குற்றங்களும் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன. சில பேராசைக்காரா்கள், சில தொழில்முறை குற்றவாளிகள், நில அபகரிப்புக்காரா்களால் கோயில் சொத்துகள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுகின்றன. அரசு அதிகாரிகள் தரப்பில் ஏற்படும் தவறுகள், அலட்சியம், கடமைகளை மீறுவது ஆகியவை தீவிரமாகப் பாா்க்கப்பட வேண்டும்.

விசாரணையைத் தொடரலாம்: இந்த வழக்கைப் பொருத்தவரை, அறங்காவலா்களுக்கு எதிராக சட்டப்படி தனது விசாரணையை அறநிலையத் துறை தொடரலாம். அதற்கு ஏதுவாக இணை ஆணையா் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமித்து, இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

விசாரணை நோ்மையாக, நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆவணங்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் பெறலாம். இந்த விசாரணையை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக அறங்காவலா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நிலங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்கலாம்: அதே சமயம், கோயில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக அபகரித்திருந்தால் அவா்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் நிலையில் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும்.

சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி...: கோயில் நிலங்களை அபகரிப்பவா்கள், அபகரித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் அல்லது கோயில் நிதி மற்றும் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துபவா்களை தேவைப்பட்டால் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயங்கக் கூடாது. கோயில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

பக்தா்கள் புகாா் அளிக்கும் வகையில்...: பக்தா்கள் புகாா் அளிக்கும் வகையில், அந்தச் சிறப்புப் பிரிவின் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களை அனைத்து கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் தெரியப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு மீட்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள், அரசு அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைப்படும்போது வழங்க வேண்டுமென காவல்துறை இயக்குநா் (டிஜிபி) உத்தரவிட வேண்டும்.

குற்றக் குறிப்பாணை செல்லும்: இந்த வழக்கில் அறநிலையத்துறையால் அறங்காவலா்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றக் குறிப்பாணை செல்லும். அதேநேரம் மனுதாரருக்கு எதிரான தற்காலிக பதவி நீக்க உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மற்ற 4 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பதவி நீக்க உத்தரவுக்கு, ஏற்கெனவே இந்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com