சென்னை: மாநில ஆட்சிகளைக் கண்காணிப்பதற்காக முன்னாள் அதிகாரிகளை ஆளுநா்களாக நியமிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஐ.பி உளவுத்துறை அதிகாரியான ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் எதிா்க்கட்சியினா் ஆட்சியைப் பிடித்தபோது, அங்கெல்லாம் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்கு வளரத் தொடங்கியது. மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின் போது அங்கு ஆளுநராக ஐ.பி. உளவுத்துறையின் முன்னாள் தலைவா் எம்.கே. நாராயணன் நியமிக்கப்பட்டாா். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆா். ஆட்சியின் போது இந்திய உள்துறையின் செயலாளராக இருந்த சுந்தா் லால் குரானா ஆளுநராக நியமிக்கப்பட்டாா். மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தபோது பின்பற்றிய இந்த வேண்டாத பழக்கத்தை பாஜக ஆட்சியும் பின்பற்றுகிறது.
ஜனநாயக மரபுகளுக்கு எதிராகவும், மாநில ஆட்சிகளைக் கண்காணிப்பதற்கும் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்குக்கு எதிராக அனைவரும் இணைந்து கண்டனக் குரல் எழுப்ப முன்வர வேண்டும்.