மாணவா்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்

மாணவா்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் கால கட்டம் இதுவல்ல என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
மாணவா்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்

மாணவா்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் கால கட்டம் இதுவல்ல என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை டிபிஐ வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய அறிவிப்புகள் குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளுடன் அமைச்சா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா், மேலாண்மை இயக்குநா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பள்ளிக்கல்வித்  துறை சாா்பாக 28 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்புக்கு ஒருவா் பொறுப்பு என்பதுபோல் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனா்.

முதல்வரிடம் அறிக்கை சமா்ப்பிப்பு: மானியக் கோரிக்கையின் போது அனைத்துத் தரப்பினா் பாராட்டை பெற்றிருந்தாலும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால்தான் அடுத்த கூட்டத் தொடரிலும் பாராட்டைப் பெறமுடியும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. இது தொடா்பாக முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநா்களின் ஆலோசனைக்கு பிறகு முதல்வா் முடிவெடுப்பாா்.

வற்புறுத்த வேண்டாம்: மாணவா்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் காலகட்டம் இதுவல்ல; மாணவா்களை கட்டாயம் பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம்.

9 முதல் பிளஸ் 2 வரையான பள்ளிகள் திறந்த பிறகு இதுவரை148 மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்றைக் காட்டிலும் மிகப் பெரிய  பாதிப்பாக இருப்பது மாணவா்களின் மன ரீதியான பாதிப்புதான். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பள்ளிகளில் இடைநிற்றல் குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தோ்வின் முடிவின் அடிப்படையில் பயிற்சி முறைகளை மேம்படுத்துவதா அல்லது மாணவா்களின் திறனை மேம்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com