மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் திராவிடக் கழக நிறுவனர் பெரியார் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இளையான்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன் தலைமை தாங்கினார். திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திமுக பேரூர்ச் செயலாளர் நஜுமுதீன், விவசாய அணி காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி யாசின், அவைத் தலைவர்கள் பெரியசாமி, செய்யதுகான், தெளலத், இளைஞரணி பெரோஸ்கான், ராஜேந்திரன் தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தில்
திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி தலைமையில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் த.சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். மாரியப்பன்கென்னடி ஆகியோர் முன்னிலையில் பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன்,. கடம்பசாமி, நகரச் செயலாளர் நாகூர் கனி மற்றும் ஒன்றிய நகர கிளைக் கழக வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.