வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் திமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் உரிமைக்காக போராடிய திராவிடர் கழக நிறுவனர் ஈ. வெ.ரா. பெரியார் பிறந்தநாள் விழா, சமூகநீதி நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வாழப்பாடி ஒன்றிய, நகர திமுக சார்பில் வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, வாழப்பாடி ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தி, நகரச் செயலாளர் பி.சி.செல்வம், ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக நிர்வாகிகள் காமராஜ், மாணவரணி கோபிநாத், சரவணன், குறிச்சி பெரியசாமி, வீரேந்திரதுரை, குணாளன், பன்னீர்செல்வன், இளைஞரணி மணி, தமிழ்ச்செல்வன், வெங்கடேஷ், ஆனந்த், சட்டக்கல்லூரி மாணவி விவேகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். பெரியார், சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர்.