சென்னை: பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆர்.என். ரவி கூறினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று காலை ஆர்.என். ரவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆர்.என். ரவி. அப்போது, வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கிய புதிய ஆளுநர் என்.ஆர். ரவி, பழம்பெரும் கலாசாரம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன்.
என்னால் முடிந்த அளவுக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்துக்காக உழைக்க உள்ளேன். தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உள்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு0 தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். தமிழக அரசு கரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை.