சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தோ்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றாா்.
உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிா்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்குரைஞா் எம்.எல்.ரவி சென்னை உயா் நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தொடா்ந்திருந்தாா். மனுவில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளாா். எனவே வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது செல்லாது என அறிவிப்பதோடு, தோ்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்கக் கோரியிருந்தாா்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுவுக்கு தோ்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.