தமிழகத்தில் இன்று மேலும் 1,697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 4.53 கோடி மாதிரிகளும் கடந்த 24 மணிநேரத்தில் 1,56,850 மாதிரிகளும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பதிவான பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 232 பேருக்கும், கோவையில் 215 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 45,380-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 1,594 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.93 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதையும் படிக்க- ம.பி.யில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,969 போ் உள்ளனா். மற்றொருபுறம், கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,337-ஆக அதிகரித்துள்ளது.