தமிழகத்தில் 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப்.20) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூா், திருவாரூா், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப்.20) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தலா 90 மி.மீ., திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் 70 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 60 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் 50 மி.மீ. மழை பதிவானது.