நெல் கொள்முதல் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்கிற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி 
நெல் கொள்முதல் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்கிற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் நெல் கொள்முதல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை குறித்தும் சட்டமன்றத்தில் நான் தெரிவித்த பதில் குறித்தும் குறிப்பிட்டு விட்டு டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாக செய்திகள் வருவதாகவும் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாக்கு இல்லை என்றும் நெல் வைப்பதற்கு இடமில்லை என்றும் திட்டக்குடி வட்டத்தில் தர்ம குடிக்காடு, கொட்டாரம், போத்திரமங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊர்களில் இயங்கி வந்த கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்றும் இதுபோல் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்து அறிக்கை ஒன்றினை இன்று (19.09.2021 ) வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் இயங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ள ஆறு ஊர்களில் 5 ஊர்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் முறையே 1884. 24 மெ.டன்கள், 2845 மெ. டன்கள், 742.68 மெ. டன்கள், 1066.48 மெ. டன்கள் மற்றும் 575.20 மெ. டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு அவை தொடர்ந்து செயல்பட்டு
வருகின்றன என்பதையும் போத்திரமங்களத்தில் மட்டுமே 14.06.2021 அன்று முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
போத்திரமங்களத்தில் 2020 – 2021 பருவத்தில் 1091.53 மெ.டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் 2020 - 2021 பருவத்தில் இதுவரை
62,70,400 சாக்குகள் கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 3,51,000 சாக்குகள் கையிருப்பில் உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மண்டலத்திலிருந்து கடலூர் மண்டலத்திற்கு 5,00,000 சாக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லினைப் பாதுகாப்பாக வைத்திட 1100 தார்ப்பாலின்களும் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 38,000 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டு 35,000 ஹெக்டேரில் அறுவடை முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 3,000 ஹெக்டேரில் உள்ள
நெல்லைக் கொள்முதல் செய்யத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 2019 - 2020 பருவத்தில் இதே
காலகட்டத்தில் 155 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,59,677 மெ. டன்கள் கொள்முதல் செய்யட்டுள்ளன. ஆனால் 2020 – 2021 பருவத்தில் 220
கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2,49,594 மெ. டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 2019 - 2020 பருவத்தில் 22,886 விவசாயிகளும் 2020 – 2021
பருவத்தில் 34,843 விவசாயிகளும் பயனடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் செயல்படாமல் உள்ளதாக குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்கள்
செயல்பாட்டிலுள்ளன என்ற உண்மையைத் தெரிந்து மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில்தான் மாவட்ட அளவில் நெல் கொள்முதலைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இரண்டு விவசாயிகள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஆணைக்கிணங்க 10.07.2021 அன்று நெல் கொள்முதல்
அதிகமுள்ள 19 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தை தலைமைச் செயலாளர் காணொலி வாயிலாக நடத்தினார். அக்கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சரும் நானும் கலந்து கொண்டோம். அக்கூட்டத்தில் நெல் கொள்முதலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினைப் பாதுகாப்பாக வைத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரவை செய்யப்பட்டு தரமான அரிசி பெறப்பட்டு வருகிறது.

2019 – 2020 பருவத்தில் இதே காலகட்டத்தில் 31.67 இலட்சம் மெ. டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2020 – 2021 பருவத்தில் இதுவரை
43.52 இலட்சம் மெ. டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 17.09.2021 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு
அதில் கூட்டுறவுத் துறை அமைச்சர், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர், நான் மற்றும் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டு வருகின்ற 2021 – 2022 பருவத்தில், விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் முறையாக நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாப்பாக சேமித்திட வேண்டும் என்றும் நெல்லை அரவை ஆலைகளுக்கு விரைந்து அனுப்பி தரமான அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் நெல் கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள், தார்பாலின்கள், நெல் தூற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நெல் கொள்முதலுக்கென்றே இரண்டு முறை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் இதுபோன்று ஒரு கூட்டமாவது நடத்தப்பட்டுள்ளதா? வேளாண் பெருமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு 2021 – 2022 பருவத்திற்கு மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தி வழங்கி உழவர்கள் நலன் காக்கும் அரசாக விளங்கி வருகிறது முதல்வரின் தலைமையிலான திமுக அரசு. எதிர்க்கட்சித் தலைவர் இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவர் பொத்தம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பிட்டுக் கூறவேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளேன். தான் ஸ்டாலின் போன்று ஆட்சி செய்யவில்லையே என்று எதிர்க்கட்சித் தலைவர் ஏங்கும் வகையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை அவர் அறிவார். 

எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டுமல்ல தொடர்புடைய அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் மக்கள் நலன் காக்கும் இந்த அரசில்
நெல் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் குறைபாடு இருந்தால் அப்பகுதியின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் அல்லது என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். எந்தக் குறையையும் யாரும் எந்த நோக்கத்திற்காக தெரிவித்தாலும் அந்தக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஆயுத்தமாக உள்ளதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com