மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் சங்கத்தின் ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானாமதுரையில் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.இ.எஸ் சங்கத்தின் மதுரை கோட்டத் தலைவர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். ரயில்வே, கப்பல், விமானம், சாலை, சுரங்கம் உள்ளிட்ட துறைகளை தனியார் மயமாக்கக் கூடாது, அவற்றின் சொத்துக்களை தனியாருக்கு விற்கக் கூடாது, ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும், ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை விற்பனை செய்வதை கைவிட வேண்டும், மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட ரயில்வே துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எஸ்.ஆர்.இ.எஸ் சென்னை நிர்வாகத் தலைவர் கே. ராஜாராம், மத்திய சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி ராஜாராம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் கே.கஜ்னா,பொருளாளர் சென்ன கிருஷ்ணா, ஐ.என்.டி.யு.சி மாநிலச் செயலாளர் ஜீவன் மூர்ததி மாவட்டச் செயலாளர் முத்து மாயன், மானாமதுரை கிளைத் தலைவர் பாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
எஸ் ஆர் இ. எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் மானாமதுரை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.