சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நீர்நிலைகள், மழைநீர் வடிகால்களில் திரவக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
மாநகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சியில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவதாக புகார்கள் வருகின்றன.
எனவே சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில், மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
நீர்நிலைகள், மழைநீர் வடிகால்களில் திரவக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் பொது இடங்களிலும், நீர்நிலைகள், மழைநீர் வடிகால்களிலும் குப்பைகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.