காரைக்குடி: பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் காரைக்குடியில் வெளியிடப்பட்டது.
டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., (கணிதப்பாடம் உள்ளடங்கியது) முடித்தவர்கள் தமிழக அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாநில கலந்தாய்வு மையத்தில் புதன்கிழமை மாலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அக்கல்லூரி முதல்வரும், கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளருமான கே. மனோன்மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி என 471 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கு 86,703 இடங்கள் மொத்தம் உள்ளன.
இதற்கு 29,894 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் தகுதியுள்ள 25,783 மாணவர்கள் தரவரிசையும், அவர்களுக்கான இணையதள கலந்தாய்வு விபரங்களும் www.tnela.com இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பித்தல் கடந்த ஆக. 10 இல் தொடங்கி ஆக. 30 இல் நிறைவடைந்தது. கலந்தாய்வு வியாழன் (செப். 23) மற்றும் வெள்ளிக்கிழமை (செப். 24) அன்று ஆன்லைன் மூலம் சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும். செப்.25 முதல் அக்.10-ந்தேதி வரை பொதுக் கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடைபெறும். செப். 11ந்தேதி பி.எஸ்சி., மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று நிறைவு பெறுகிறது.
மாணவர்கள் தங்களது தரவரிசை நிலையையும், அவர்களுக்கான கலந்தாய்வு தேதியினையும் இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். தகுதிப் பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தங்களின் செல்லிடப்பேசி மற்றும் கணினி உதவியுடன் கல்லூரி விருப்பப்பதிவை சமர்ப்பிக்கலாம்.
தற்பொழுது கரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக கலந்தாய்வு வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின் போது இணை ஒருங்கிணைப்பாளர்கள் கே. பாஸ்கரன், சி. உமாராணி, பி. பெருமாள், எஸ். பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.