சென்னை: தொழில்துறை வளர்கிறது என்றால், அனைத்துத் துறைகளும் வளர்கிறது என்று பொருள். உலக சூழலுக்கேற்ப பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக தொழில்துறையில் உலகம் இருக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
இன்று 10 ஏற்றுமதி நிறுவனங்களுடன் ரூ.240 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ. 2,120 கோடி மதிப்பில் 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய அளவில் ஏற்றுமதியில் தமிழகம் 3வது இத்தில் உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும். தமிழகத்தின் கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ள பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று கூறினார்.
மேலும், திருவள்ளூரில் அமையவிருக்கும் கார் உதிரி பாகத் தயாரிப்புத் தொழிற்சாலை மூலம் சுமார் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற மாநாடுகளும், கண்காட்சிகளும் தமிழகத்தில் அதிகளவில் நடைபெற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.