திருப்பூர்: திருப்பூர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 99 சென்ட் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமம் வஞ்சியம்மன் கோயில் அருகில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 99 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நில அளவீட்டில் ஆக்கிரமிப்பு இருந்தது வருவாய்த்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி முன்னிலையில் வருவாய்த்துறையினர் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 99 சென்ட் நிலத்தை மீட்டு புதன்கிழமை கம்பிவேலி அமைத்தனர். மேலும், 'வருவாய்த்துறைக்குச் சொந்தமானது' என்ற அறிவிப்பு பலகையையும் வைத்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடியாகும்.