மின்சார வாரியத்தை கடந்த அதிமுக அரசு சீரழித்துவிட்டது என்றும், ரூ.1.59 லட்சம் கோடி அளவுக்கு கடனில் உள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்குவதால் தமிழ்நாடு மின்சார வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனில் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலையில் உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்திலேயே திருவாரூரில் முதல் சூரியசக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ற வகையிலும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிக்கலாமே.. விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளி.. அதன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம்
தமிழகத்தில் அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றுகிறார்கள்.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வெறும் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள்தான் வழங்கப்பட்டுள்ளன. விவசாயமே செய்யாதவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் வரை விவசாயக் கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 மாதத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் முடிக்கப்படும் என்றும் அறிவித்தார்.