ஆடம்பரங்களைத் தவிர்ப்பதே மகாத்மாவின் கொள்கை

ஆடம்பரங்களைத் தவிர்ப்பதே மகாத்மா காந்தியின் கொள்கை என்று பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கூறினார். 
திருப்பூரில்  ராம்ராஜ்  காட்டன்  சார்பில்  காந்திய  வேட்டி  நூற்றாண்டு  விழாவில்  சுதந்திரப்  போராட்ட  வீரர்  திருப்பூர் குமரனின்  வாரிசு  பி.டி.சதானந்தத்துக்கு  நினைவுப்  பரிசு  வழங்கி கௌரவிக்கிறார்
திருப்பூரில்  ராம்ராஜ்  காட்டன்  சார்பில்  காந்திய  வேட்டி  நூற்றாண்டு  விழாவில்  சுதந்திரப்  போராட்ட  வீரர்  திருப்பூர் குமரனின்  வாரிசு  பி.டி.சதானந்தத்துக்கு  நினைவுப்  பரிசு  வழங்கி கௌரவிக்கிறார்

திருப்பூர்: ஆடம்பரங்களைத் தவிர்ப்பதே மகாத்மா காந்தியின் கொள்கை என்று பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கூறினார். 
மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றால் எளிமையான வாழ்க்கையும், உயர்வான சிந்தனையும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் மகாத்மா காந்தி வேட்டிக்கு மாறியதன் நூற்றாண்டு விழா திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள கருணையம்மாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். ராம்ராஜின் வெண்மை மாத இதழ் சார்பில்  மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நூலை கோவை ரூட்ஸ் குழுமங்களின் தலைவர் கே.ராமசாமி வெளியிட பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின்தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பெற்றுக் கொண்டு பேசியதாவது: 
மகாத்மாவை உலகில் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் அகிம்சையால் சுதந்திரம் கிடைத்ததில்லை. ஒரு தனிமனிதன் பிளவுபட்டுக் கிடந்த தேசத்தை ஒருங்கிணைத்தார். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள 30 கோடி மக்களை மதத்தால், இனத்தால், மொழியால் ஒன்றிணைத்து அகிம்சை வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார். 
வருந்திய நோபல் கமிட்டி: மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ஒரு முறையேனும் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்துக்குச் செல்ல வேண்டும். அத்தகைய சிறப்புடைய மகாத்மா காந்தியின் பெயர் இரண்டு முறை  நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக நோபல் பரிசுக் கமிட்டி, மகாத்மாவுக்கு நோபல் பரிசு கொடுக்காதது இமாலயப் பிழை என்று கூறியுள்ளது. 
ஆகவே, தேசப்பிதாவின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றால் எளிமையான வாழ்க்கையும், உயர்வான சிந்தனையும் வேண்டும். ஆனால் தற்போது பகட்டான வாழ்க்கையும், மலிவான சிந்தனையுமே உள்ளது. ஆடம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் செலவழிக்க வேண்டும் என்றார்.
நினைவுப் பரிசுகள், காசோலைகள்:  முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மூன்று பேருக்கு நினைவுப் பரிசுகளையும், நெசவாளர்கள் 3 பேருக்கு நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளையும் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார். 
மேலும், பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா ஃபவுன்டேஷன் நிறுவனத்துக்கு 100 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க ரூ. 1.50 லட்சமும், ஆனைமலையில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்துக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையும் வழங்கினார். 
நிகழ்ச்சியில், வனம் இந்தியா ஃபவுண்டேஷன் செயலாளர் ஸ்கை வி.சுந்தர்ராஜ், ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தின் நிறுவனர் எம்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com