சீர்காழி: சீர்காழி அடுத்த தொடுவாயில் மர்மமான முறையில் இளைஞர் இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 12 நாளில் கொலை செய்தவர்களை சீர்காழி போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அடுத்த தொடுவாய் அன்னை தெரசா வீதி சுனாமி நகரை சேர்ந்தவர் முருகன் (26) இவர் கடந்த ஐந்தாம் தேதி மாரியம்மன் கோவில் அருகே காயத்துடன் இறந்து கிடந்தார் . முருகனின் உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இது குறித்து அறிந்த அப்பகுதி விஏஓ மோகனகிருஷ்ணன் சீர்காழி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீசார் விரைந்து சென்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த முருகனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முருகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் முருகன் தொடுவாய் பகுதியில் உள்ள மதியழகன் என்பவர் வீடு புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீடு புகுந்த முருகனை பிடித்து அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் சிலர் அடித்துள்ளனர். அதன் பின்னர் முருகன் இறந்ததாக தெரிகிறது.
இது குறித்து விசாரனையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்து தொடுவாய் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவியரசன் (24) வெள்ளரீசன் (44 ,மதுரைவீரன் ( 33) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அஞ்சம்மாள், செல்வம், செல்வநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மர்மமான முறையில் இளைஞர் இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 12 நாளில் கொலை செய்தவர்களை சீர்காழி போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.