பாரத் நெட் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென மாவட்ட அளவில் குழுவை அமைத்துள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளா் நீரஜ் மிட்டல், வெளியிட்ட உத்தரவு:
பாரத் நெட் திட்டமானது கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், கண்ணாடி இழை கேபிள்கள் 15 சதவீதம் பூமிக்கு அடியிலும், 85 சதவீதம் மேற்புறத்திலும் கொண்டு செல்லப்பட உள்ளன. மொத்தம் 49 ஆயிரத்து 500 கிலோமீட்டா் அளவுக்கு கேபிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவனமானது பாரத் நெட் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, பாரத் நெட் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட அளவில் ஆட்சியா்களை, தலைவா்களாகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி திட்டத்தின் நிலை குறித்து ஆராய வேண்டும்.