தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் விவசாயிகள் சுங்க வசூல் மறுப்புப் போராட்டம்

தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சுங்க வசூல் மறுப்புப் போராட்டம் நடத்தினர். 
தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சுங்க வசூல் மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சுங்க வசூல் மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அச் சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சுங்க வசூல் மறுப்புப் போராட்டம் நடத்தினர். 

போராட்டத்தின் போது விவசாயிகள் கூறியதாவது:

தாராபுரம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கபடுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு தக்காளி பெட்டி ஒன்றுக்கு ரூ. 6 வசூலித்து வந்த நிலையில் தற்போது ரூ.10 சுங்க கட்டணம் வசூல் செய்து வருகிறார்கள். 

மேலும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது போக மீதமுள்ள காய்கறிகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்க கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்கள் விவசாயிகளை தரக்குறைவாக நடத்துவதுடன் காய்கறிச் சந்தையில் விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளுக்கு  முறையான ரசீது வழங்கப்படுவதில்லை.

மேலும் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை ரோட்டில் வைத்து விற்பனை செய்யக் கூடிய அவலநிலை இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் சுங்க கட்டணம் வசூல் செய்கிறார்கள். சுங்க கட்டணம் வசூல் செய்வதில் மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கும் அதிகாரிகள் விலை பொருள்களை விற்பனை செய்ய தனியே இடம் ஒதுக்கித் தரவில்லை. மழைக்காலங்களில் விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்து விடுகிறது. 

தாராபுரம் பழைய பேருந்து பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்துக் காவலர்கள் விவசாயிகள் கடுமையாக திட்டுவதுடன் அப்பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். 

விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து தாராபுரம் சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் இடத்தில் பலமுறை மனு கொடுத்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

எனவே, தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சுங்கம் வசூலிப்பு மறுப்புப் போராட்டம் விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்தியுள்ளோம். 

காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை அன்று நகராட்சி ஆணையாளர் சங்கர் முன்நிலையில்  தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுங்க வரியை முறைப்படுத்தி விவசாயிகள் விற்பனை செய்வதற்கு தனி இடம் அமைத்து தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டனர். 

மேலும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள இரு தினங்களுக்கு பழைய சுங்க கட்டணமான ரூ.6 மட்டுமே விவசாயிகளிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் தெரிவித்துள்ளனர். 

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
விவசாயிகளின் சுங்க வசூல் மறுப்பு போராட்டத்தினால் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com