மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் ஒரே நாளில் 2.13 லட்சம் தடுப்பூசிகள்

சென்னையில் இன்று நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 2.13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் ஒரே நாளில் 2.13 லட்சம் தடுப்பூசிகள்

சென்னையில் இன்று நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 2.13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 26.08.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 12.09.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கரோனா தடுப்பூசிகளும், 19.09.2021 அன்று நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2,02,931 கோவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட வேண்டும் என முதல்வரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் இன்று (26.09.2021) 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 25.09.2021 அன்று வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 32,70,822 முதல் தவணை தடுப்பூசிகள், 16,86,550 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 49,57,372 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவ மனைகளின் வாயிலாக 7,71,153 முதல் தவணை தடுப்பூசிகளும் 2.,72,232 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என 10,43,385 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 25.09.2021 அன்று வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 60,00,757 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், இன்று (26.09.2021) நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம், 2,13,763 கரோனா தடுப்பூசிகள்
செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்கின்ற நிலையில், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இந்த ஆய்வின்போது அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் எஸ். மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்), திரவிஷு மகாஜன் இ.ஆ.ப., (வருவாய் மற்றும் நிதி), திருமதி ஷரண்யா அரி, இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), மாநகர நல அலுவலர், மாநகரா மருத்துவ அலுவலர் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com