சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி வழங்கும் 2021ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பபாசி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
2007-ல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியை துவக்கிவைத்த, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்கள். அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்துக் கவுரவித்து வருகிறது. அதன்படி 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ் சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:
1. அபி - கவிதை
2. இராசேந்திர சோழன் - புனைவிலக்கியம்
3. எஸ்.ராமகிருஷ்ணன் - உரைநடை
4. வெளி ரங்கராஜன் - நாடகம்
5. மருதநாயகம் - ஆங்கிலம்
6. நதித் சாகியா - பிற இந்திய மொழி(காஷ்மீரி)