ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாளை(அக்.1) முதல் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக். 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே, பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனைவியின் இறப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக எந்த அரசியல் நிகழ்விலும் கலந்துகொள்ளதாக நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் நாளை முதல் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், மூன்றாம் தேதியன்று விழுப்புரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.