சென்னையில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி 51 ஆவது வார்டு திமுக உறுப்பினர் நிரஞ்சனா. இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னையில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் உள்பட 5 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மூன்று பேர் வழக்குரைஞர்கள்.
இந்நிலையில், ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.