யுகாதித் திருநாளை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு அதிமுக தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், யுகாதித் திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இவ்வண்ணமே தமிழக மக்களோடு இணைந்து சகோதர, சகோதரிகளாய், தூய சொந்தங்களாய் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றியே பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அம்மா மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.