சீமைக்கருவேலம் உள்பட வெளிநாட்டு மரங்களை வேரோடு அகற்றும் பணியை ஒருங்கிணைப்பதற்கும், பணிகளை நீதிமன்றத்திற்கும் தெரிவிக்க உதவுவதற்கும் ஒருங்கிணைக்கும் அதிகாரியை (நோடல் அதிகாரி) நிரந்தரமாக நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வனம், வனவிலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வனத்துறையில் அதிகாரிகள் ஒருவா் பின் ஒருவராக மாறுகின்றனா். இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, புதிய அதிகாரிக்கு வழக்கின் முந்தைய முன்னேற்றங்கள் குறித்து தெரிவதில்லை.
எனவே, சீமைக்கருவேலம் உள்பட வெளிநாட்டு மரங்களை அகற்றும் பணியை ஒருங்கிணைக்க ஒரு முழு நேர அதிகாரியை வனத்துறை பரிந்துரைக்க வேண்டும்; அத்தகைய அதிகாரி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை பணியில் இருக்க வேண்டும்.
சீமைக்கருவேலம் உள்பட வெளிநாட்டு மரங்களை வேரோடு பாதுகாப்பாகவும், விரைவாகவும் அப்புறப்படுத்தும் முன்னோடி திட்டத்தை உருவாக்கி அரசு தெரியப்படுத்த வேண்டும். தற்போது மாநிலத்தில் புலிகள் காப்பகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது; ஆனால் வேரோடு அத்தகைய மரங்களை அகற்றும் பயனுள்ள செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் அரசுக்கு வலியுறுத்தினா்.
நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
இந்த அமா்வில், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தக்கோரிய வழக்கு விசாரணையின்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களில் உணவு, குடிநீா் விற்கமாட்டோம் என உத்தரவாதம் எழுதி வாங்கிக் கொண்டு பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.