இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்து சமய அற நிலையத் துறை துறையால் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம், நாள் முழுவதும் அன்னதான திட்டம், ஒருகால பூஜை திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, திருக்கோயில் சொத்துக்களை மீட்டு எடுத்தல், திருக்கோயில்களில் பக்தர்களுக்கு இலவச முடி மழிக்கும் திட்டம், முடி மழிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித் தொகை, அறநிலையத்துறை சார்பில் புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்குதல் என பக்தர்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க- சகோதரர் பசில் ராஜபட்ச பதவி பறிப்பு: கோத்தபய நடவடிக்கை
இந்து சமய அற நிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் 36,000 திற்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் இயங்கி வருகின்றன. 4-கூடுதல் ஆணையர்கள், 35-இணைஆணையர், 30-துணை ஆணையர், 77-உதவி ஆணையர்கள் கண்காணிப்பு பொறியாளர், செயற் பொறியாளர்கள், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஆகிய அலுவலர்களை கொண்டும், 50000 திற்கும் மேற்பட்ட திருக்கோயில் பணியாளர்களை கொண்டும் இத்திருக்கோயில்கள் நிர்வகிக்கப்படுகிறது.
இவலுவலர்களின் அலுவல் தொடர்பான போக்குவரத்தில் உள்ள சிரமங்களை களையும் வகையில், முதல்வரின் வழிகாட்டுதலின் படி “-அலுவலக பயன்பாட்டிற்காக 108 வாகனங்களை 8 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும் என்ற அறிவிப்பினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக வாகனங்கள் கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது. முதற் கட்டமாக 5.08 கோடி ரூபாய் செலவில் 69 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வழங்கப்படுவதால், அலுவலர்கள் கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளவும், திருக்கோயில் சொத்துக்களை சிறப்பாக நிர்வகிக்கவும், மேலும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்யவும் இயலும்.
கொள்முதல் செய்யப்பட்டுள்ள 69 வாகனங்களை உரிய அலுவலரிடம் வழங்கி சிறப்பிக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.