சென்னையில் 2,000 அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் பேரூந்துகளில் பேனிக் பட்டன் பொருத்தும் பணி நடந்துவருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையில் 2,000 அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் இந்த புதிய செயல்திட்டம் வரவுள்ளது.
அதன்படி பேரூந்துகளில் பேனிக் பட்டன் பொருத்தப்படும். பிரச்னை ஏற்படும் பட்சத்தில் இதனை அழுத்தினால் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். இதற்காக போக்குவரத்துத் துறைக்கென தனிக்கட்டுப்பாட்டு அறை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எலக்ட்ரிக் பைக்குகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகான சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என்றார்.
மேலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.