ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்ததால் ஆறுமுகசாமி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததன்பேரில் சமீபத்தில் இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் இரு நாள்கள் விசாரணை நடைபெற்றது. இதுவரை 156 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், ஆணையம் தரப்பிலும், சசிகலா தரப்பு விசாரணையும் முடிந்துள்ளது.
அப்போலோ தரப்பில் மட்டும் இறுதியாக ஏப்ரல் 5, 6, 7 தேதிகளில் அப்போலோ தரப்பு சார்பில் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.
மருத்துவர் பால்ரமேஷ், 'ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு எக்மோ கருவி பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆண்டு (2016) செப். 29, 30, அக். 9ல் நடத்தப்பட்ட ஆலோசனையில் அது தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது' என்று கூறியுள்ளார்.
அதுபோல மருத்துவர் நரசிம்மன், 'ஜெயலலிதாவுக்கு நிலையான மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டது ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக சந்தித்தேன். அவர் நலமாக இருந்தார்' என்று தெரிவித்துள்ளார்.