சத்தியமங்கலம் - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது தெரிவித்துள்ளது.
கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் - திம்பம் இடையேயான 27 கி.மீ. வனப்பகுதி வழியாக மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை வாகனங்கள் செல்லக் கூடாது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் பயன்பாடு, அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி அமர்வு இன்று வெளியிட்ட உத்தரவில்,
"சத்தியமங்கலம் சாலையில் மாலை 6 மணிக்கு மேல் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு, கர்நாடக அரசு போக்குவரத்து வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் அனுமதி வழங்கக்கூடாது.
27 கி.மீ. வனப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கி சென்றுவர அனுமதிக்கலாம். பால் மற்றும் மருத்துவ பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கலாம்.
12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள், 16.2 டன் எடைக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி கிடையாது.
அனுமதிக்கப்படும் வாகனங்கள் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். 27 கி.மி. வனப்பகுதியில் 5 கி.மிட்டருக்கு இடையே சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும். வணிக வாகனங்களிடமிருந்து கட்டணம் பெற்று சிசிடிவி கேமிராக்களை பராமரிக்கலாம்.
வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலம் அமைக்க வேண்டும்."