ஆண்டு இறுதிக்குள் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆண்டு இறுதிக்குள் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்
ஆண்டு இறுதிக்குள் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்


சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு, இரண்டாவது பகுதி இன்று தொடங்கியுள்ளது. பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது.

அப்போது சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும். திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவே துபைக்கு பயணம் மேற்கொண்டேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், 

2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்குவிக்கக்கூடிய வகையில் ஒற்றைச் சாளர முறை மூலமாகத் தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அந்த வாக்குறுதிகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

20.7.2021 அன்று சென்னையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 17,141 கோடி ரூபாய் முதலீடும், 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 
 
22.9.2021 அன்று சென்னையில் “ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 1880 கோடி ரூபாய் முதலீடும், 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 

23.11.2021 அன்று கோயம்புத்தூரில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி வாயிலாக 35,208 கோடி ரூபாய் முதலீடும், 76,795 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 

7.3.2022 அன்று தூத்துக்குடியில் “சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது” 4,488 கோடி ரூபாய் முதலீடும், 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 

“சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி” எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தொழில் வளர்ச்சிக்கு இவ்வளவு முயற்சிகளை எடுத்துள்ள இந்த அரசின் சார்பில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். துபாயில் நடைபெற்ற உலக கண்காட்சி, 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிகழ்வுகளில் ஒன்று. 192 நாடுகள் பங்கேற்ற அக்கண்காட்சியில் மார்ச் 25 முதல் 31 ஆம் தேதி வரை “தமிழ்நாடு வாரமாக” கடைபிடிக்கப்பட்டது.

கண்காட்சியின் இறுதி வாரங்களில்தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் நான் துபாய் சென்று, மார்ச் 25 ஆம் தேதி “தமிழ்நாடு அரங்கினை”, அந்த அரங்கில் உள்ள கண்காட்சியைத் திறந்து வைத்தேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்த துபை பயணத்தின் வாயிலாக 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஷெராப் குழும நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு “சரக்குப் பூங்கா”அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

10 மாதங்களிலேயே தொழில் துறையில் இந்த அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளுக்கு நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் எடுத்த நடவடிக்கைகளே காரணம். 20.7.2021 அன்று தொழில்களை ஈர்க்க, 24 துறைகளைச் சார்ந்த 100 சேவைகளை மின்மய வடிவில் அளித்திடும் வகையில் “ஒற்றைச் சாளர இணையதளம்-2.0”-யைத் தொடங்கி வைத்தேன். 23.11.2021 அன்று “ஒற்றைச்சாளர கைபேசி செயலி”யையும் தொடங்கி வைத்தேன். 7.3.2022 அன்று தொழில் தொடங்கத் தேவைப்படும் நிலம் தொடர்பாக “தமிழ்நாடு நிலத் தகவல் இணையத்தை” தொடங்கி வைத்தேன். அதே, 7.3.2022 அன்று தொழில் தொடங்குவதற்குரிய அனுமதிகள், ஒப்புதல்கள், நடைமுறைகளை அறியும் “வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணைய தளத்தை” துவக்கி வைத்தேன் என்று கூறினார்.

இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடா்ச்சியாக, நீா்வளத் துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com