ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகளின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதி, நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாக சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2019ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகள் அளித்த கூடுதல் மனுக்கள் மீது விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகள் அளித்த கூடுதல் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணை மனுதாரர்களாக இணைய முடியாது என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈஞ்சம்பாக்கத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பெத்தேல் நகா் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளதால் அதனை அகற்றும் அரசின் நடவடிக்கை தவறல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், பெத்தேல் நகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் கூறியுள்ளது.