மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட இக்கோயிலில் திருவிழா தொடக்கமாக சோமநாதர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9. 40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்ற்றது. அதன்பின் கொடிமரத்திற்கு தர்ப்பைப்புல், மலர்மாலைகள் சாற்றி கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்றம் முடிந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற அலங்கார தீபாராதனை.
அதைத் தொடர்ந்து அங்கு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது சிவனடியார்கள் கூடி கைலாய வாத்தியங்கள் இசைத்தனர்.
கொடியேற்ற நிகழ்வுகளை கோயில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி என்ற சக்கரைப் பட்டர் சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். நாகராஜன், நகராட்சி ஆணையர் கண்ணன், உள்ளிட்ட உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடியேற்றத்தின் போது சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமி.
தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வீதியுலா வருதல் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 14 ஆம் தேதியும் மறுநாள் 15 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 16 ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.