வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியபோதே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சாதிவாரியாக கணக்கெடுக்க ஆணையம் அமைக்கப்பட்டு 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஆணையத்திற்கான காலஅவகாசத்தை நீட்டிக்கவில்லை.
இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாதது ஏன்? தரவுகளை சமர்பிக்காதது ஏன்?
இதையெல்லாம் மறைத்துவிட்டு முந்தைய ஆட்சி மீது பழிசுமத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.