சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்தவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கருமலைக்கூடல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் சின்னைய ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் ராஜேஸ் (26). இவர் நேற்று இரவு கருமலைக்கூடல் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது சகோதரியும் குழந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அஜய் நகர் 4 ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது முகமூடி அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 4 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து எட்டி உதைத்தனர்.
இதில், தடுமாறி கீழே விழுந்த ராஜேஷை வீச்சரிவாளால் சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. ராஜேஷ் உடன் வந்த சிறுமி அலறியவாறு ஓடவே. அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கருமலைக்கூடல் போலீசார் படுகாயமடைந்த ராஜேஷை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ராஜேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ராஜேஷ் மீது ஒரு கொலை வழக்கும், ஒரு அடிதடி வழக்கு கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. ரௌடிகள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலைச் சம்பவம் கருமலைக்கூடல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.