கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கொளத்தூர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்ச்சியில் முதல்வர் ஆற்றிய உரை: என்ன தான் நான் இன்றைக்கு தமிழகத்திற்கே முதல்வராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி என்று வருகிறபோது எனக்கு ஒரு உணர்வு, ஒரு பாசம், ஒரு அன்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், என்னைத் தேர்ந்தெடுத்து, என்னைத் தொடர்ந்து இந்த தொகுதியிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கக்கூடிய மக்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருந்து வருகிறது. ஆகவே அந்த ஆவலோடு வந்திருக்கிறேன். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பது எப்படி உருவாக்கப்பட்டது. ஏன் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன். இருந்தாலும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீட் என்ற ஒரு கொடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி அதிலே படித்து வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருணாநிததி முதல்வராக இருந்தவரையில் நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்த ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையிலே, அந்த நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. காரணம், அவருடைய பதவி நிலைக்க வேண்டும். ஆகவே தன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டு நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டார்கள்.
அதனால்தான் நம்முடைய மாணவச் செல்வங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் அதிர்ச்சியடைந்து அவர்கள் அதிகமான மதிப்பெண்ணைப் தேர்வில் பெற்றாலும், நீட்டிலே வெற்றி பெற முடியாது என்று எண்ணி நம்முடைய மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடக்கூடிய நிலை நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது. 
அதில் முதல் மாணவியாக அரியலூர் பகுதியைச்சார்ந்த தாழ்த்தப்பட்டக் குடும்பத்தில் பிறந்த அனிதா என்ற நம்முடைய அருமை சகோதரி பள்ளிக்கூடத்தில் படிக்கிறபோது நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தவர் தான். அவர் இந்த நீட் தேர்விலே வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவருடைய நினைவாகத்தான் நம்முடைய கொளத்தூர் தொகுதியிலே அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என தொடங்கி அதன் மூலமாக மாணவச் செல்வங்களுக்கு முறையான பயிற்சியை வழங்கி, அதன் மூலமாக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி அந்தப் பணியை இன்றைக்கு சிறப்பாக நம்முடைய தொகுதியைப் பொறுத்தவரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனை ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த பயிற்சிக்கு வரும்பொழுது சொல்வதுண்டு. நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும். ஏன் நம்முடைய கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா தொகுதிக்கும் இதை கொண்டு வரவேண்டும் என்று நான் அடிக்கடி சொன்னதுண்டு. எதிர்க்கட்சியாக இருந்தபொழுது நான் இந்தப் பணியை மேற்கொண்டு இதில் வெற்றியைப் பெற்றேன். எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது நன்றாக கவனிக்க வேண்டும். அப்போது நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகு நான் எதிர்க்கட்சியாக இருந்து தொடங்கிய பணி தான், இன்று நான் முதல்வன் என்ற அந்த பெயரிலே ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறேன். “நான் முதல்வன்”, நான் மட்டுமல்ல, எல்லோரும் முதல்வன், இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேரும் முதல்வனாக வரவேண்டும். எல்லாவற்றிலும் முதல்வனாக வரவேண்டும்.
ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், எல்லாத் துறைகளிலும் முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற பெயர் சூட்டி, அந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இன்னும் வெளிப்படையாக சொன்னால், “நான் முதல்வன்” என்கிற திட்டத்தைத் தொடங்குவதற்கு மூலகாரணமே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தான் என்பதை பெருமையோடு சொல்கிறேன். இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளையுமே அதில் ஈடுபடுத்தி, “நான் முதல்வன்” என்ற திட்டத்தை நடத்தக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையிலே தான் இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் இது வரை இளம் பெண்கள் 7 பிரிவுகளில் 515 பேர்களுக்கு மடிக்கணினியும், சான்றிதழ்களும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். இளைஞர்கள் 3 பிரிவுகளில் 236 பேர்கள் மடிக்கணினியும், சான்றிதழ்களும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள்.
இன்று இளம்பெண்கள் 152 பேர்கள், இளைஞர்கள் 71 பேர்கள், 64 மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கிறார்கள். மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கக்கூடிய அத்தனை பேரையும் நான் இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மட்டுமல்ல, எல்லாத்தையும் விட உங்களில் ஒருவனாக அத்தனை பேரையும் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com