சென்னை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டத்துடன், அந்த மாவட்ட அருங்காட்சியம் இணைக்கப்படுவதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டத்தை சீரமைப்பது குறித்து பாமக உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டமானது கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-இல் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. 300 போ் அமரக்கூடிய அரசு நிகழ்ச்சிகளுக்காக அந்தக் கோட்டத்தில் இடவசதி உள்ளது.
அரசின் அரங்குகளை பொது மக்களுக்கான சுப காரியங்களுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே கோட்டங்கள், அரங்குகளைச் சீரமைப்பது குறித்து பொதுப்பணித் துறையிடம் மதிப்பீடு பெறப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் மணிமண்டபங்களை அரங்குகளாக அமைத்து பொது மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது: தருமபுரி அருங்காட்சியத்தை அதியமான் கோட்டத்துடன் இணைப்பது குறித்த அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது என்றாா்.