நீண்ட நாள் பங்களிப்புக்காக ஊழியர்கள் 5 பேருக்கு தலா ரூ. 1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கியிருக்கிறது சென்னை மென்பொருள் நிறுவனம்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல மென்பொருள் நிறுவனமான 'கிஸ்ஃப்ளோ'வின் 10 ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன், தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் கௌசகிராம் கிருஷ்ணசாயி, பொறியியல் பிரிவு இயக்குனர்கள் விவேக் மதுரை, ஆதி ராமநாதன் மற்றும் துணை தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேருக்கும் நிறுவனர் சுரேஷ் சம்மந்தம் 5 பி.எம்.டபிள்யூ. கார்களை பரிசளித்தார்.
'நிறுவனம் தொடக்கம் முதலே இவர்கள் என்னுடன் இருக்கின்றனர். என்னுடைய கடின காலத்திலும் இருந்துள்ளார்கள். அவர்களின்றி நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. விலையுயர்ந்த காரைவிட மிகப்பெரிய பரிசு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களது உழைப்புக்கான மிகச்சிறிய அங்கீகாரம் இது' என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு தெரியாமல் விழாவில் சர்ப்ரைஸாக ஊழியர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. 'எங்களால் இதனை நம்ப முடியவில்லை. கனவு நனவான நேரம்' என்று கார் பரிசு பெற்ற ஊழியர்கள் கூறுகின்றனர்.
ஊழியர்களுக்கு பி.எம்.டபிள்யூ. சீரிஸ் 5 வழங்கப்பட்ட நிலையில் நிறுவனர் சுரேஷ், 3 ஆண்டுகளுக்கு முந்தைய பி.எம்.டபிள்யூ. சீரிஸ் 6 பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.