ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே கல்லூரி மாணவா் ஒருவா் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காக கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியிருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும். ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீா்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.