புதுக்கோட்டை: குடும்பத் தகராற்றில் உறவினரை கழுத்தை நெறித்துக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆனைவாரியைச் சேர்ந்தவர் முத்து (56). இவர் கடந்த 2020 நவம்பர் 11ஆம் தேதி இவரது உறவினர் வீரய்யா (48) என்பவரை வெள்ளாற்றங்கரையில் வைத்து கழுத்தை நெறித்துக் கொன்றார்.
இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது பழைய குடும்பத் தகராறு பேச்சு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியபோது இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து கே.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துவைக் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞர் பா.வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் நிறைவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல்காதர், குற்றவாளி முத்துவுக்கு செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் முத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை ரூ.5 லட்சத்தை, முத்து சிறையில் மேற்கொள்ளும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்திலிருந்து 20 சதவிகிதத்தை மாதந்தோறும் எடுத்து, கொல்லப்பட்ட வீரய்யாவின் மனைவி புனிதாவின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.