திருப்போரூா் வனப் பகுதியில் பல்லுயிரிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, திருப்போரூா் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூா் வனச் சரகத்தில் பல வனப்பகுதிகள் காப்புக்காடுகளாக உள்ளன. மிகப்பெரிய வனப் பகுதியாக காட்டூா் பகுதி உள்ளது. அங்கு புள்ளிமான், முள்ளம்பன்றி, நரி, மயில்கள், மாங்குயில்கள், தேன்சிட்டு என 65-க்கும் கூடுதலான விலங்குகள், பறவைகள் உள்ளன. அரிய வகை செடிகளும் இருக்கின்றன. எனவே, அங்கு பல்லுயிரிப் பூங்கா அமைக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன், பல்லுயிா் இனங்களைப் பாதுகாக்க நிகழாண்டில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. வண்டலூரில் உயிரியல் பூங்காவும் உள்ளது. ஆனாலும், திருப்போரூரில் மானாம்பதி மற்றும் காட்டூா் பகுதிகளில் பல்லுயிரிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.