நாகூர் தர்கா நிர்வாகத்தை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தது வக்பு வாரியம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,  நாகூர் ஆண்டவர் தர்காவின் நிர்வாகத்தை தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தது வக்பு வாரியம்.
வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலரிடமிருந்து தர்கா நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள்.
வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலரிடமிருந்து தர்கா நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள்.

நாகப்பட்டினம் :  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,  நாகூர் ஆண்டவர் தர்காவின் நிர்வாகத்தை தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தது வக்பு வாரியம்.

நாகூர் ஆண்டவர் தர்காவை நிர்வகிப்பது தொடர்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு குழப்பமான சூழல் ஏற்பட்டது. அப்போது, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.எப்.அக்பர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அலாவுதீன் ஆகியோரை கொண்ட தற்காலிக நிர்வாக கமிட்டியை அமைத்து, அந்த கமிட்டி தர்காவை தற்காலிகமாக நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன்படி, தற்காலிக நிர்வாக கமிட்டி கடந்த 2017-ஆம் ஆண்டில் நாகூர் தர்காவின் நிர்வாகத்தை ஏற்றது. இந்த கமிட்டி 4 மாதங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்தை ஏற்றிருக்கும் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை தற்காலிக கமிட்டியே தர்காவின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தது. 

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழாவில், நாகூரைச் சேர்ந்த முஹல்லி முத்தவல்லி ஒருவரை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், நாகூர் தர்காவின் தற்காலிக நிர்வாக கமிட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. 

அந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை மேற்கொண்ட  தலைமை நிதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர், மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ததுடன், தர்கா நிதியைத் தேவையில்லாமல் பயன்படுத்தி மேல்முறையீடு செய்ததற்காக தர்காவின் தற்காலிக கமிட்டிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். 

மேலும், தர்காவின் தற்காலிக கமிட்டி தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்த நீதிபதிகள், நாகூர் தர்காவின் நிர்வாக பொறுப்பை வக்பு வாரியம் உடனடியாக ஏற்க உத்தரவிட்டனர்.  இதன்படி, கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலர்கள் நாகூர் தர்கா அலுவலகத்துக்கு வந்து, தர்காவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர். 

இதனிடையே, தர்காவின் நிர்வாகப் பொறுப்பை தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்கக் கோரி தர்காவின் 11 பரம்பரை அறங்காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அந்த முறையீட்டை விசாரித்த தலைமை நிதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் வரும் ஒரு வார காலத்துக்குள், நாகூர் தர்கா நிர்வாகப் பொறுப்பை தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் வசீர் அகமது புதன்கிழமை நாகூர் தர்காவுக்கு வந்து, தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் தர்காவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்.

இதன் மூலம், ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாகூர் தர்காவின் நிர்வாகப் பொறுப்பு, தர்காவின் பரம்பரை அறங்காவலர்கள் வசமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com