சேலத்தில் திரையரங்கின் கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகர் கைது

சேலத்தில் திரையரங்கின் கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகர் அசோக் கையில் ரத்தம் சொட்டும் நிலையில் போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தில் திரையரங்கின் கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகர் கைது

சேலம்: சேலத்தில் திரையரங்கின் கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகர் அசோக்கை கையில் ரத்தம் சொட்டும் நிலையில் போலீஸார் கைது செய்தனர். கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அசோக் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. நேற்று இரவிலிருந்து விஜய் ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 

இன்று காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளுக்கு மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விஜய் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திட்டமிட்டபடி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யை திரையில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சில திரையரங்குகளில் காலை 7 மணி சிறப்பு காட்சி டிக்கெட் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் திரையிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கில் சிறப்புக் காட்சி கொண்டாட்டத்தின்போது சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற விஜய் ரசிகர் திரையரங்கின் கண்ணாடியை கையில் குத்தி உடைத்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் கையில் ரத்தம் சொட்ட சொட்ட  அசோக்கை கைது செய்தனர். கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அசோக் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதேபோன்று சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கைலாஷ் பிரகாஷ் திரையரங்கிலும் சிறப்பு காட்சியின் போது விஜய் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடியை உடைத்தனர். கண்ணாடியை உடைத்தது குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சேலத்தில் அஜீத் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் போது அஜித்  ரசிகர்கள் கொண்டாட்டத்தின்போது திரையரங்கின் மேற்கூரை மற்றும் கண்ணாடிகளை உடைத்த நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் போது விஜய் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com