அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் பாஜகவினரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக கொடி கீழே விழுந்ததால் பாஜக - விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது விசிக-பாஜகவினர் கடும் மோதல்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை (11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன்.அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.